செட்டிநாடு உப்பு கறி

செட்டிநாடு உப்பு கறி

கோடையில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் கோடையில் விடுமுறை நாட்களில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள்.

இங்கு அந்த செட்டிநாடு உப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
பூண்டு - 20 பற்கள் (தட்டிக் கொள்ளவும்)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
குண்டு வரமிளகாய் - 10
தக்காளி - 1 (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.

மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கி, பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!