கறிமீன் பொலிச்சது

கறிமீன் பொலிச்சது

தேவையானவை:

கறிமீன் - 2
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 5 இலைகள்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வாழை இலை - சிறியது
தேங்காய்ப்பால் - 1 டேபிள்ஸ்பூன் (தண்ணீருக்கு பதிலாக)
எண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன்

ஊற வைக்க:

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை நன்கு கழுவி மேலும் கீழும் கத்தியால் கீறி விட்டுக் கொள்ளவும். மிளகுத்தூளை உப்புடன் கலந்து, மீனில் தடவி அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து ஒரு டிஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் மீனை இருபுறமும் வேக விட்டு எடுத்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியதும், தக்காளியைச் சேர்த்துக் கரைய வதக்கவும்.

உப்பு போட்டுக் கிளறவும். ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்/தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும். அடுப்பை அணைத்து கிளறியதை நான்கு பாகமாகப் பிரிக்கவும். வாழை இலையை தீயில் இரண்டு புறமும் லேசாக வாட்டி எடுக்கவும். இதில் ஒரு பாக கலவையை வைத்து, அதன் மேல் மீனை வைக்கவும். இதன் மேல் மற்றொரு கலவை பாகத்தை எடுத்துப் பரப்பவும். இலையால் மீனை மூடி வாழை நாரால் கட்டி விடவும்.

இதே போல மீதம் இருக்கும் மற்றொரு மீனிலும் கலவையைத் தடவி வாழை இலையில் வைத்து மூடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வாழை இலை மீனை வைத்து மூடியால் மூடி சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மீனைத் திருப்பிப் போட்டு மீண்டும் பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.