சிக்கன் தால் ரெசிபி

சிக்கன் தால் ரெசிபி

சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்ழுன்
உப்பு - தேவையான அளவு
பாசிப்பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 2-3 கப்
கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1
டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பைக் கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். அதே சமயம் சிக்கனையும் சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கன், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

கலவை கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து மூடி வைத்து 25 நிமிடம் சிக்கன் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் பாசிப்பருப்பை சேர்த்து, 15 நிமிடம் பருப்பை வேக வைக்க வேண்டும். பருப்பு நன்கு வெந்து குழம்பு நன்கு கொதித்ததும், அதனை இறக்க வேண்டும்.

பின் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதனை குழம்பில் சேர்த்து கிளறி கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் தால் ரெடி!!!