நாட்டு கோழி குழம்பு

 நாட்டு கோழி குழம்பு

நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. கிராமப் பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப் போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி.

நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் – 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 6 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
சோம்பு – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – 6
டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா செய்முறை:

1.சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

2. தக்காளியை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

3.இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4.வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

செய்முறை:

1.நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3.இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும்.

4.இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும்.

5. அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

6.சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.

7.5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும்.

8.இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும்.

9.நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

10.விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார்.

11.சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடு டிஸ் இது