இடியாப்ப பிரியாணி

இடியாப்ப பிரியாணி

தேவையானவை:
இடியாப்பம் - 60
கோழிக்கறி (சிக்கன்) - ஒரு கிலோ
தயிர் - 200 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
நெய், தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 10 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு, பாதாம் - தலா 25 கிராம் (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)
பெருஞ்சீரகத்தூள், சீரகத்தூள் - ஒரு ஸ்பூன் (விழுதாக அரைக்கவும்)
பெரிய தேங்காய் - 1 (பால் எடுத்து கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 20 (பாதியை இரண்டிரண்டாகவும், மீதி பாதியைப் பொடியாகவும் நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 10, ரம்ப இலை - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கோழிக்கறியைக் கழுவி மஞ்சள்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத் தூள், உப்பு, தயிர், இரண்டாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தயிர், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

பெரிய சட்டியை அடுப்பில் ஏற்றி, நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதில் கோழிக்கறிக் கலவையைக் கொட்டி நன்றாக கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது தேங்காய்ப் பாலை ஊற்றி, முந்திரி பாதாம் விழுது சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இடியாப்பத்தை ஒன்றிரண்டாகப் பிய்த்து வைக்கவும். கொதித்த கலவையில் இடியாப்பம் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி 5 நிமிடம், `தம்’ போடவும். சுவையான மணமான இடியாப்ப பிரியாணி தயார்.

ரம்ப இலை நாகர்கோவில் பகுதியில் சர்வ சாதாரணமாக கிடைக்கும். இதற்கு பதில் பிரிஞ்சி இலையையும் பயன்படுத்தலாம்.