மட்டன் லிவர் மசாலா

மட்டன் லிவர் மசாலா

ஆட்டு ஈரல் உடலில் இரத்த அணுக்களின் உற்பத்திக்கு சிறந்த ஒன்று. இத்தகைய ஆட்டு ஈரலை வாங்கி வாரத்திற்கு ஒருமுறை மசாலா செய்து வளரும் குழந்தைகளுக்கு மற்றும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு கொடுப்பது நல்லது.

உங்களுக்கு மட்டன் லிவர் மசாலா எப்படி செய்வதென்று தெரியுமா? இங்கு மட்டல் லிவர் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் லிவர்/ஈரல் - 500 கிராம்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஈரலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பால் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 சிட்டிகை மிளகாய் தூள், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள ஈரலை சேர்த்து 5 நிமிடம் கிளறி வேக வைத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தேங்காய் பொடி மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி 5-10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

மசாலா நன்கு வெந்ததும், அதில் ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை மேலே பிழிந்தால், மட்டன் லிவர் மசாலா ரெடி!!!