கறிவேப்பிலைக் கோழி

கறிவேப்பிலைக் கோழி

தேவையானவை:

சிக்கன் - அரை கிலோ
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) -
ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்க‌னை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். மிதமான தீயில் சிக்கனை வேக விடவும். தேவையென்றால், தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். கலவை கிரேவி பதத்தில்தான் வர வேண்டும். இறக்குவதற்கு முன் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.