கோழி ரசம்

கோழி ரசம்

தேவையானவை:

எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 250 கிராம் (சிறிய சைஸ்)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 7 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 10 இலைகள்
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, மல்லி (தனியா) மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து, ஆறவைத்து அரைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டுபல்லைத் தட்டி வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். நான்கு பேருக்கு ரசம் தயார் செய்ய தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை வேகவைக்கவும்.

வெந்த சிக்கனை மட்டும் எடுத்து நான்கு பவுல்களில் சமமாகப் பிரித்து வைக்கவும். சிக்கன் வெந்த தண்ணீரை சிறிது நேரம் அதே வாணலியில் கொதிக்கவிடவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். இந்த ரசத்தை, ஒவ்வொரு சிக்கன் பவுலிலும் சமமாக ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசத்தை சூடாகப் பரிமாறவும்.