மலபார் சிக்கன் ரோஸ்ட்

மலபார் சிக்கன் ரோஸ்ட்

கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - 6
வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு...
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1

செய்முறை:
முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!