தேங்காய்ப் பால் பிரியாணி

தேங்காய்ப் பால் பிரியாணி

தேவையானவை:

ஆட்டுக்கறி (மட்டன்) - ஒரு கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 150 மில்லி
பெரிய வெங்காயம் - அரை கிலோ (நீளமாக நறுக்கவும்)
தக்காளி - 400 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பெரிய எலுமிச்சை - 1 (சாறு எடுக்கவும்)
இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 15 கிராம்
புதினா. கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு
ரம்ப இலை - 4
தேங்காய் - அரை மூடி (திக்கான பால் எடுக்கவும்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி, குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 2 விசில் வரை வேக விட்டு இறக்கவும்.

பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி் சூடானதும், பட்டை, ஏலக்காய், லவங்கம் ரம்ப இலை சேர்த்து வதக்கவும். இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் மீதம் இருக்கும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை மட்டும் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும். இத்துடன் தேங்காய்ப்பால், கறி வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலவையைக் கொதிக்க விடவும். மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வடித்துக் கொள்ளவும். பிரியாணி கலவையில் அரிசியை உடையாமல் சேர்த்துக் கிளறி, நெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சமமாக கலக்கவும்.
அடுப்பில் ஒரு பழைய தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு, அதன் மேல் சோறு வடித்த சூடான கஞ்சியுடன் சட்டியை வைத்து தம் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.சுவையான மட்டன் பிரியாணி தயார்.