செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் அசைவ உணவுகள் என்றால் நன்கு மணத்துடனும், காரமாகவும் இருக்கும். உங்களுக்கு இறால் பிடிக்குமா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை எப்படி செய்வதென்று தெரியுமா?

இங்கு செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)

வறுத்து அரைப்பதற்கு...

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2-4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

குழம்பிற்கு...

எண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் மசாலா பொடியையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி, உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் பிரியும் போது, அதில் இறாலை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!!