காரமான மட்டன் மசாலா

காரமான மட்டன் மசாலா

மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். சரி, இப்போது அந்த காரமான மட்டன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2 (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்

ஊற வைப்பதற்கு:
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில் மட்டனை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கழுவிய மட்டனுடன் சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பிறகு அதில் தக்காளி சேர்த்து பிரட்டி விட வேண்டும். தக்காளி நன்கு மென்மையானதும், அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை அதிகரித்து குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான மற்றும் காரமான மட்டன் மசாலா ரெடி!!!